ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 9,000 ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 24 ஆம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,213 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறையிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
இதன்படி ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் 9,000 ஆசிரியர்கள் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவ விடுப்பில் இருப்பவர்கள், நீண்ட நாள்கள் விடுப்பில் சென்றவர்கள் குறித்த விவரமும் உள்ளது. தேர்தல் பணி குறித்து ஆசிரியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு மார்ச் 24 ஆம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இரண்டு பயிற்சி வகுப்புகளுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதனால் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.