தமிழக அரசின் சார்பில் சிறார்களுக்கான கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் ஈரோட்டில் புதன்கிழமை (மே 1) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறார்களின் கலை ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இளம் வயதிலேயே கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவித்திடவும் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர், சிறுமியருக்கு பகுதி நேர கலைப் பயிற்சி அளித்து வருகிறது.
ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால விடுமுறையில் பயனுள்ள வகையில் கலைகள் பயின்றிட கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் மே 1 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடைபெறும் இம்முகாமில் குரலிசை (பாட்டு), நடனம், ஓவியம், யோகா, கீ போர்டு மற்றும் சிலம்பம் ஆகியக் கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து பயன் பெறலாம்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணமில்லை, உறுப்பினர் சந்தா கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு அரசு இசைப் பள்ளியில் உள்ள ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9842780608 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.