நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (65). இவர் தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு சத்தியமங்கலத்தில் இருந்து வீடு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரங்கசமுத்திரம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்ததால் வேலுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலுசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.