கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கொடுமுடி அருகே சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் தினேஷ்குமார் (17). பிளஸ் 2 படித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் தாமரைப்பாளையத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். பின்னர் தனது உறவினர்களுடன் கொடுமுடி அருகே உள்ள கருவேலாம்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதைக் கண்ட அவரது உறவினர் சசிகுமார், தினேஷ்குமாரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.