முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் பலத்த சூறாவளிக் காற்று: மின் வெட்டால் மக்கள் தவிப்பு
By DIN | Published On : 18th May 2019 06:34 AM | Last Updated : 18th May 2019 06:34 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகரில் தொடர்ந்து வீசும் சூறாவளிக் காற்றால் ஏற்படும் மின் தடையால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிக மழை இல்லை என்றாலும் கடும் சூறாவளிக் காற்றால் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் வட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
மேலும், சூறாவளிக் காற்று காரணமாக கடந்த ஒருவாரமாக மாலை 4 மணி தொடங்கி சில நேரங்களில் இரவு 8 மணி வரை மின் வநியோகம் தடைபடுகிறது. கிராமப் பகுதிகளில் மறு நாள் வரை மின் விநியோகம் தடைபடுகிறது.
இந்த மின் தடையால் ஈரோடு மாநகரில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் கடந்த 10 நாட்களாக பகல் நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மாலை நேரத்தில் மழை வருவதுபோல் இருந்தாலே மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. சில இடங்களில் இரவு நேரத்தில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் விநியோகம் செய்வதால் மின்விசிறிகள் இயக்க முடியாமல் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சீரமைப்புப் பணி என்று மாவட்டத்தில் தினமும் 2 அல்லது 3 துணை மின் நிலையங்களில் பகல் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.