ஈரோட்டில் போக்குவரத்தை சீரமைக்க அரசு மருத்துவமனை சாலையில் புதிதாக சிக்னல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் வாகனப் பெருக்கத்தால் பன்னீர்செல்வம் பூங்கா, அரசு தலைமை மருத்துவமனை பகுதி, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை சரிசெய்ய மாநகரின் மையப் பகுதியான அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ரூ.54 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பெருந்துறை, திருப்பூர், கோவை செல்லும் அனைத்து பேருந்துகளும் பாலத்தின் கீழ் வழியாகவே சென்று வருகிறது.
இதனால் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கட்டப்பட்ட மேம்பாலத்தால் எந்த பயனும் இல்லை. பாலத்தின் கீழ் பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனைத் தவிர்க்க மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிக்னலில் வாகனங்கள் அதிகமாக வரும் நேரம், குறைவாக வரும் நேரம் என சிக்னலில் நிமிடம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 சாலைகள் சந்திக்கும் பகுதியாக உள்ளதால் சிக்னல் அமைத்து கண்காணித்தால் ஓரளவு விபத்து குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனை பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தால் எந்தவிதப் பயனும் இல்லை. தற்போது, இந்த பகுதியில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முறையாக இயக்க வேண்டும்.
அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிக அளவில் தனியார் மருத்துவமனை உள்ளது. ஆம்புலன்ஸ் அதிகமாக வந்து செல்லும்.
எனவே, அதற்கேற்ப சிக்னலை அமைத்து போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.