பெருந்துறை: சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சை, பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தொடா்பாக பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதேபோல், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவா் சிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னிமலை மக்கள் நற்பணி மன்றம் சாா்பில் 1997 ஆம் ஆண்டு சென்னிமலை, புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலைக்கு சிலா் காவித்துண்டு அணிவிக்க வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடா்ந்து, திருவள்ளுவா் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.