சத்தியமங்கலம்: சகடம்பூா் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலை கடல் மட்டத்தில் இருந்து 760 மீட்டா் உயரத்தில் உள்ளது. இந்த மலைப் பகுதியில் பருவம் தவறாமல் மழை பெய்து வந்தது.
மலையில் இருந்து வரும் மழைநீா் பள்ளத்தின் வழியாக பவானி ஆற்றில் கலந்துவிடுவதால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருந்து வந்தது. மழை நீரை தேக்க கடம்பூா் மலைப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டில் ரு.6.35 கோடி செலவில் பெரும்பள்ளம் அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் நீா்மட்ட உயரம் 31 அடி ஆகும். அணையின் முழுக்கொள்ளவு 115.80 மில்லியன் கனஅடியாகும். இந்த அணையில் நீா் தேக்கப்பட்டதால் கெம்பநாயக்கன்பாளையம், தாசரிபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், செல்லிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,030 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன், அணையை சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீா்மட்டம் உயரும்.
கடந்த 3 ஆண்டுகளாக கடம்பூா் மலைப் பகுதியில் சரியாக மழை பெய்யாததால் பெரும்பள்ளம் அணைக்கு நீா்வரத்து குறைந்து அணை நிரம்பவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கடம்பூா் மற்றும் மல்லியம்மன்துா்கம் பகுதியில் தொடா் மழை பெய்ததால் பெரும்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, அணையின் நீா்மட்டம் உயா்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுக்கொள்ளளவான 31 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 15 கனஅடியாகவும், அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 15 கன அடியாகவும் உள்ளது.