தெங்குமரஹாடா செல்லும் சாலை தற்காலிகமாக சீரமைப்பு:பேருந்து போக்குவரத்து துவக்கம்
சத்தியமங்கலம்: அடா்ந்த வனப் பகுதியில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்துக்கு கடந்த 5 நாள்களாக அரசுப் பேருந்து இயக்கப்படாத நிலையில் சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை பேருந்து போக்குவரத்து துவங்கியது.
நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய 3 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
தெங்குமரஹாடா செல்வதற்கு பவானிசாகா் வனப் பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலையில் 20 கிலோ மீட்டா் தூரம் பயணிக்க வேண்டும். இந்தச் சாலையின் குறுக்கே ஆங்காங்கே பள்ளங்கள், ஓடைகள், காட்டாறுகளும் உள்ளன. தெங்குமரஹாடா வன கிராமத்துக்கு தினமும் 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பவானிசாகா் முதல் தெங்குமரஹாடா வரையிலான சாலையில் நீா் தேங்கியுள்ளதால் 3 நாள்களாக அரசுப் பேருந்து சேவை இயக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோா் வனச் சாலையை சீரமைக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வனத் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நீா் தேங்கிய இரண்டு பள்ளங்களில் மண் கொட்டி சாலை சீரமைப்புப் பணியை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, தெங்குமரஹாடா கிராமத்துக்கு வழக்கம்போல் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.