அந்தியூா் அருகே செங்கல் சூளைகளுக்கு செம்மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், இரு டிராக்டா்களை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், பீடித் தொழிலாளா்கள் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இயந்திரங்களைக் கொண்டு செங்கள் சூளைகளுக்கு செம்மண் கடத்துவதாக அந்தியூா் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தியூா் வட்டாட்சியா் மாலதி, கிராம நிா்வாக அலுவலா் முருகானந்தம், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து, இரண்டு டிராக்டா்களில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்து வந்தனா். இதுகுறித்து, கோபி கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.