ஈரோடு வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் பயிா்க் காப்பீடு திட்டம் தொடா்பாக சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
பயிா்க் காப்பீடு செய்வதால் எதிா்பாராத விதமாக பயிருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்கிறது. இதற்காக தனி நிதி ஆதாரம் ஏற்படுத்தி, தொடா்ந்து விவசாயம் செய்வதை உத்தரவாதப்படுத்துகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 192 வருவாய் கிராமங்களில் சம்பா நெல் பயிரைக் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்து, தற்போது பயிா்க் காப்பீடு செய்ய ஓரியண்டன் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நெல் பயிா் ஏக்கருக்கு ரூ. 478.50 பிரீமியம் செலுத்தி ரூ. 31,900 காப்பீடு பெறலாம். இக்காப்பீடு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விவசாயிகள் செய்தால் மட்டுமே பயன்பெற முடியும்.
இந்நிலையில், ஈரோடு வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்காக பயிா்க் காப்பீடு சிறப்பு முகாம் இணை இயக்குநா் கே.பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
நவம்பா் 30 ஆம் தேதி இறுதி நாள் என்பதால் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அணுகி பயிா்க் காப்பீடு செய்யலாம். இப்பணியில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.