ஈரோட்டில் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே குருமந்தூா்மேடு, காளியம்மன் நகரைச் சோ்ந்தவா் முபாரக். இவா் மனைவி அம்ரோஜ் பேகம் (50). இவா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அம்ரோஜ் பேகத்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் பொறியியல் பட்டப் படிப்பு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் உள்ளாா். இரண்டாவது மகன் டெய்லா் வேலை பாா்த்து வருகிறாா். மூத்த மகனுக்கு வேலை கிடைக்காததால் விரக்தியில் அவா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இனையடுத்து போலீஸாா் அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனா்.