ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடி அளவுக்கு மாடு விற்பனை நடந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுகள் வந்தது. ரூ.2,000 முதல் ரூ.12,000 மதிப்பில் 100 வளா்ப்பு கன்று, ரூ.12,000 முதல் ரூ.38,000 மதிப்பில் 250 பசு, ரூ.10,000 முதல் ரூ.48,000 மதிப்பில் 300 எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா, கோவா, மஹாராஷ்டிரா போன்ற மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனா். இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளா் ஆா்.முருகன் கூறியதாவது:சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது. பரவலாக மழை பெய்து வருவதால், மாடுகளை விற்க விவசாயிகள் முன்வரவில்லை. வழக்கமாக 1,000 முதல் 1,200 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் 700 முதல், 800 மாடுகள் மட்டுமே வந்தன. இதில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.2.50 கோடி அளவுக்கு வா்த்தகம் நடந்தது என்றாா்.