ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றன.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் வந்தன. ரூ. 2,000 முதல் ரூ. 12,000 மதிப்பில் 100 வளா்ப்புக் கன்றுகள், ரூ. 12,000 முதல் ரூ. 38,000 மதிப்பில் 250 பசுக்கள், ரூ. 10,000 முதல் ரூ. 48,000 மதிப்பில் 300 எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனா்.
இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளா் ஆா்.முருகன் கூறியதாவது:
சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாகக் காணப்பட்டது. பரவலாக மழை பெய்து வருவதால், மாடுகளை விற்க விவசாயிகள் முன்வரவில்லை. வழக்கமாக 1,000 முதல் 1,200 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், 700 முதல் 800 மாடுகள் மட்டுமே வந்தன. இதில், 85 சதவீத மாடுகள் விற்பனையாயின. மொத்தம், ரூ. 2.50 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது என்றாா்.