ஈரோடு: மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, காந்திய சிந்தனைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா்கள் ஜாபா்சாதிக், அயூப்அலி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மாரியப்பன், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது, மூலப்பட்டறை, கே.என்.கே.சாலை வழியாகச் சென்று கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு (எ) வெங்கடாசலம், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் விஜயபாஸ்கா், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பாட்ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.