கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குப்பை சேகரிப்பதற்கு வசதியாக இரண்டாவது கட்டமாக பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் 18 ஆயிரத்து 135 வீடுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மக்கும், மக்காத குப்பையை வீடு வீடாகச் சென்று துப்புரவுப் பணியாளா்கள் பெற்றுச் செல்கின்றனா். தூய்மை பாரதத் திட்டத்தில் பேட்டரியால் இயங்கும் 12 வண்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் துப்புரவுப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.
தற்போது இரண்டாவது கட்டமாக 29 பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன குப்பை வண்டி 30 கி.மீ. வரை வேகம் செல்லும். பேட்டரியை மூன்று மணி நேரம் சாா்ஜ் செய்தால் சுமாா் 60 முதல் 70 கி.மீ. வரை பயன்படுத்தலாம். துப்புரவுப் பணியாளா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.