மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 298 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் போஷன்அபியான் திட்டத்தின்கீழ் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 173 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா கஸ்பாபேட்டை அங்கன்வாடி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகளை வழங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை (1) சாந்தி கிறிஸ்டி வரவேற்றார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, பழனியம்மாள், கமலம், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், சிந்தாமணி கூட்டுறவுச் சங்க இயக்குநர் கணபதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் தட்சிணாமூர்த்தி, ஆவின் இயக்குநர் அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 124 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தெய்வஜோதி தலைமை வகித்தார். கொடுமுடி ஒன்றியச் செயலாளர் கலைமணி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் வள்ளியம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.