ஈரோட்டில் ஓணம் திருவிழா கேரள மக்கள் வாழும் பகுதிகளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில் கேரள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளான சாஸ்திரி நகர், ரயில்வே காலனி, திண்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர். வீட்டு பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமம், சந்தன திலகமிட்டு, கொப்பரையில் நெல்லை நிரப்பி அதன் மீது தென்னங்குருத்து வைத்து. அப்பம், நாட்டுச் சர்க்கரை, இனிப்பு பதார்த்தங்களை படைத்து, புத்தாடை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஓணம் பண்டிகையைக் கொண்டாட வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்களுக்கு பூஜையில் வைத்து நெய்வேத்தியம் செய்த பால் பாயாசத்தை வழங்கி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அருகே உள்ள சிவாலயம், பெருமாள், ஐயப்பன், அம்மன் கோயில்களில் வழிபாடு நடத்தினர். இதனால், அனைத்து கோயில்களிலும் கேரள மக்களின் கூட்டம் புதன்கிழமை காலை அதிகமாக இருந்தது.