கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த கோழிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
மொடக்குறிச்சி, அவல்பூந்துறை பகுதி கீழ்பவானி வாய்க்காலில் இறந்த கோழிகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி, பூந்துறைசேமூர், அய்யகவுண்டன்பாளையம், செல்லப்பகவுண்டன்வலசு, அவல்பூந்துறை, மின்னக்காட்டுவலசு, புதுப்பாளையம், குளத்துப்பாளையம், குள்ளகவுண்டன்வலசு பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கீழ்பவானி பாசனம் மூலம் நெல்நடவுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாய்க்காலில் இறந்த கோழிகள் மிதந்து வருகிறது. அந்தக் கோழிகள் மதகில் அடைத்து தண்ணீர் அடைப்பு ஏற்படுகிறது. அதை கையில் எடுக்க முடியாத நிலையில் அழுகி கிடப்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு தொற்றுநோய்களும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த கோழிகளை வாய்க்காலில் போடுகின்றனர். இந்தத் தண்ணீரை ஆடு, மாடுகள் குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பறவைக் காய்ச்சலும் வரும் வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.