நாடார் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை மாலை அளித்த பேட்டி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட வெளிநாடு சுற்றுலாப் பயணத்தின் மூலம் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடும், இதன் மூலம் 88 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி வரவேற்கத்தக்கது.
பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. பதனீரை இறக்கினாலே கள் இறக்குவதாகக் கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். எனவே, கள் என்பதை மதுபான வகையில் இருந்து நீக்கிவிட்டு உணவுப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய வணிகர்கள், தொழில் அதிபர்களாக இருப்பதாகத் தவறான எண்ணம் பரவலாக உள்ளது. தூத்துக்குடி பகுதியில் பெண்கள் தற்போதும் பீடி சுற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனவே, சிரமப்படுபவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் செல்லப்பன், பொருளாளர் தர்மராஜ், செயலாளர் ஆசைத்தம்பி, தலைமை நிலைய செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.