சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரகுநாதன் தலைமையில் 8 க்கும் மேற்பட்ட போலீஸார், சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்றனர். அப்போது, அலுவலகத்தில் பணியிலிருந்த சார்பதிவாளர் உமாமகேஸ்வரியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தகவல் தெரிவித்துவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. மேலும், சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் லஞ்சப் பணம் அப்பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்களிடம் உள்ளதா என அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் கணக்கில் வராத பணம் உள்ளது குறித்து தகவல்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.