மொடக்குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற இளைஞரை மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (60), விவசாயி. இவரது கணவர் பெரியசாமி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு தரணி என்ற மகனும் மைத்ராதேவி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாமியாத்தாள் பஞ்சலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வியாழக்கிழமை அதிகாலை 6 மணி அளவில் துணி துவைப்பதற்காக வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாமியாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். சாமியாத்தாள் சப்தம்போடவே அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய இளைஞரைப் பிடிக்க முயன்றனர். ஆனால், பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.