பவானி நகராட்சிப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பவானி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை, ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் தொடங்கி வைத்தார். நகராட்சி மேலாளர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்ணபுரம் 3 ஆவது வீதி, மேட்டூர் சாலை, அந்தியூர் மேட்டூர் பிரிவு வழியாகச் சென்ற பேரணி மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதில், தமிழக அரசு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் 15 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இவ்வகைப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே, இவ்வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில், துப்புரவு அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.