சென்னையில் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் விபத்தில் சிக்கி பெண் பொறியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரோடு மாநகரில் மாநகராட்சி அலுவலர்கள் விளம்பரப் பதாகைகளை சனிக்கிழமை அகற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விளம்பரப் பதாகைகளை வைப்பது தொடர்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக விளம்பரப் பதாகைகள் அகற்றப்படுகின்றன. அதன்படி ஈரோடு நகரில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு, மூலப்பட்டறை, சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
பெருந்துறையில்...
பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியை பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பெருந்துறையில் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பாதகைகளை அகற்றினர்.