பெருந்துறை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி, ஜே.சி.ஐ. எலைட் சங்கம், மத்திய ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பேரணியை, சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.
பெருந்துறை காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, அரசு மருத்துவமனை, பெருந்துறை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கொங்கு நகர், பெத்தாம்பளையம் பிரதான சாலை வழியாகச் சென்று விநாயகர் கோயில் அருகில் நிறைவடைந்தது. இதில், பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.கிருஷ்ணன், சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் கே.சி.முத்துசாமி, ரோட்டரி கிளப் தலைவர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.