சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் பெய்த பலத்த மழையால் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.
திம்பம் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்ந்துகிடந்த வனப் பகுதி பச்சைப்பசேலென மாறி அழகாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், திம்பம் மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக அப்பகுதியில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. இந்த அருவியில் மழைநீர் கொட்டும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. திம்பம் மலை உச்சியில் சாலையோரத்தில் பாறைகளைத் தழுவியபடி அருவியில் கொட்டும் தண்ணீரை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.