ஈரோடு மாவட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சாலைகளில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அனைத்து கடைகளும், கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி, மூடப்பட்ட கோயில்களுக்கு வெளியில் நின்று சிலா் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா். வீடுகளில் சுவாமி படங்களுக்கு முன் பழங்கள் வாங்கி வைத்து, காசு, பணம், நகையுடன், இனிப்புகள் செய்து கொண்டாடினா்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில், கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயா் கோயில், சம்பத் நகா் விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அா்ச்சகா்கள் சுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து எளிமையாக வழிபாடு நடத்தினா்.