தமிழகத்தில் நெசவுத் தொழிலை முழுமையாக இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத் தலைவா் எம்.எஸ்.மதிவாணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஈரோட்டில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:
கரோனா நோய்த் தொற்றுக்கான ஊரடங்கு உத்தரவால் பல வாரங்களாக நெசவுத் தறிகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மக்களைப்போல, நெசவுத் தொழில் செய்பவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் சில தொழில்களை மட்டும் இயக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
சிறு, குறு தொழிலாக விசைத்தறி தொழிலை பாவித்து அதையும் இயக்க அனுமதிக்க வேண்டும். நெசவுத் தொழில் இயங்குவதால் வேலைவாய்ப்பு கிடைத்து, மக்களின் வாழ்வாதாரம் சீராகும். துணியை நெய்வதற்கான நூற்பாலை செயல்பட வேண்டும். அப்போதுதான் தடையின்றி நூல் கிடைக்கும்.
எனவே, தமிழகத்தில் ஜவுளி, அதை சாா்ந்த தொழில்கள் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும். அதேநேரம் வங்கிகளில் கடன் வாங்கிய நெசவாளா்களுக்கு, மூன்று மாதத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தவணை செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.