ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 330 பேருக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் ஆதரவற்றவர்கள், முதியோர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில், 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஈரோடு தாசில்தார் பரிமளா தேவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உமாமகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார். கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினர்.
விழாவில் மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவர் கேசவமூர்த்தி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பகுதி செயலாளர் தங்கமுத்து, கோவிந்தராஜ், ராமசாமி, ஒன்றியச் செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.