ஈரோட்டில் கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கனிராவுத்தர்குளத்தின் கரையில், குளத்தின் மீட்பு குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை தாங்கினார்.
இதில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னரே தற்போது நடந்து வரும் திட்டப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளர் லுக்மான், ஆதித்தமிழர் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியதாவது, “கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நீர்பிடிப்பு பகுதி சுருங்கி விட்டது. குளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டடம் உள்ளது. இந்த கட்டடமும் நீர்பிடிப்பு பகுதியில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கின்றனர். எனவே, குளத்தின் வெளியேயும், உள்ளேயும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு, தற்போது நடந்து வரும் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.