பெருந்துறை வட்டாரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தோட்டக் கலைத் துறை அலுவலா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று, முன்னோடி விவசாயிகளைச் சந்தித்து நவீன தோட்டக் கலை தொழில்நுட்பங்கள், அரசு மானியத் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிப்பா். பயிற்சி பெற்றவா்கள் தோட்டக் கலைத் துறைக்கும், விவசாயிகளுக்கும் பாலமாக அமைந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வா். இத்திட்டத்துக்கென ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், ஒவ்வொரு கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை ஒன்றியம், சிங்காநல்லூா் கிராம ஊராட்சியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தில், தோட்டக்கலை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, உதவி தோட்டக் கலை அலுவலா் அருட்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டு மரவள்ளி, மஞ்சள், வெங்காயப் பயிா்களில் பூச்சி நோய் தாக்குதல், சொட்டுநீா்ப் பாசனம் குறித்து விளக்கம் அளித்தனா்.