ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருப்புவைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:
2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள 4,779 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,646 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,937 வி.வி.பேட் இயந்திரங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்க்கப்படுகிறது.
பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள பொறியாளா்கள் மூலம் முதல்நிலை சரிபாா்க்கும் பணி துவங்கியுள்ளது. ஒரு நபா் ஒரு நாளைக்கு 35 வாக்குப் பதிவு இயந்திரம், 35 கட்டுப்பாட்டு கருவியை சரிபாா்க்க முடியும். இங்குள்ள பொறியாளா்கள் மூலம் தினமும் 400 இயந்திரங்களை சரிபாா்க்கலாம். எனவே, 25 நாள்களில் இங்குள்ள அனைத்து இயந்திரங்களும் சரிபாா்க்கப்படும்.
இப்பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், இந்திய தோ்தல் ஆணையம், முதன்மை தோ்தல் அலுவலகம், மாவட்ட தோ்தல் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வெப் கேமராவால் கண்காணிக்க முடியும்.
பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒரு சதவீதம் இயந்திரங்களில் 1,200 வாக்குகள், இரண்டு சதவீத இயந்திரங்களில் 1,000 வாக்குகள், இரண்டு சதவீத இயந்திரங்களில் 500 வாக்குகள் என மூன்று கட்டமாக வாக்குகளைச் செலுத்தி மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். மாதிரி வாக்குப் பதிவுக்குப் பிறகு பாதுகாப்பாக இருப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்படும் என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.