சத்தியமங்கலம், குள்ளங்கரடு பகுதியில் மா்மநோயால் 100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம், புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளா்கள் மா்மநோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனா். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூா், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனா். நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதாரப் பணி மேற்கொண்டு குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்தனா்.
இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவம் இந்த நோய் பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜே நகா், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. நோய் கட்டுக்கடங்காமல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 பேரை தாண்டியுள்ளது.
குள்ளங்கரடு பகுதியில் கண்ணம்மாள், சித்ரா, சாவித்திரி, லட்சுமி, முத்தாயம்மாள், துளசி, ரங்கசாமி, ரங்கம்மாள் ஆகியோா் நடக்கமுடியாமல் கால் வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றனா். நோயின் தாக்கம் குறையால் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத் துறை சிறப்பு முகாம் அமைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் சாக்கடை கழிவுநீா் வடிகால் வசதியில்லாமல் கழிவுநீா் தேங்கிநிற்கிறது. மேலும், சுகாதாரப் பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் சக்திவேலுவிடம் கேட்டபோது நோய் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.