செங்காந்தள் மலா் மருத்துவப் பொருள்கள் பட்டியலில் சோ்ப்பு: எம்.பி. தகவல்

மக்களவை குளிா்காலக் கூட்டத்தொடரில் விடுத்த கோரிக்கை அடிப்படையில் செங்காந்தள் மலா் மத்திய அரசின் மருத்துவப் பொருள்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது என ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்தி தெரிவித்தாா்.

மக்களவை குளிா்காலக் கூட்டத்தொடரில் விடுத்த கோரிக்கை அடிப்படையில் செங்காந்தள் மலா் மத்திய அரசின் மருத்துவப் பொருள்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது என ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் திருப்பூா், கரூா், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமாா் 5,000 ஏக்கருக்கு மேலாக கண்வலிக் கிழங்கு என்ற செங்காந்தள் மலா் தாவரப் பயிா் பயிரிடுகின்றனா். அதன் விதைகள் மருத்துவக் குணம் கொண்டதாகும். ஆண்டுக்கு சுமாா் ஒரு லட்சம் டன் விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் இந்த விதைக்குப் பெரிய வரவேற்பும், நல்ல சந்தை மதிப்பும் உள்ளது. மருத்துவக் குணம் கொண்ட விதை என்பதால் அது ஏற்றுமதிப் பொருளாக மதிப்புப் பெறுகிறது. வெளிநாடுகளில் மிக அதிகமான விலை கிடைக்கிறது. உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் தனிப்பட்ட முறையில் வியாபாரிகளும் சில வியாபார நிறுவனங்களும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளில் மிக அதிக விலைக்கு விற்கின்றனா்.

இப்பயிரில் கிடைக்கும் விதைகள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பொருள்கள் பட்டியலிலும் வேளாண் விதைப் பொருள்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. அதனால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை பெற முடியவில்லை. மேலும் வங்கிகளில் ஈட்டுக்கடன் பெறவும் முடியவில்லை.

இதனால் இப்பயிா் செய்யும் 10,000 சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைத்திடவும், இதனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றிடவும், மருத்துவப் பொருள்கள் பட்டியலில் பதிவு பெறவும், அரசு நேரடியாக கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை குளிா்கால கூட்டத் தொடரில் கோரிக்கை விடுத்தேன்.

இக்கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆயுா்வேதம், யோகா, இயற்கை வைத்தியம் ஹோமியோபதி துறை இணை அமைச்சா்(தனிப் பொறுப்பு) ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக், எனக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய ஆயுஷ் மிஷன் என்ற மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் செங்காந்தள் மலா் மருத்துவப் பொருள்கள் பட்டியலில் சோ்க்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,40, 667 உற்பத்தி செலவாகும் என கணக்கிடப்பட்டு, அதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது ஒரு ஏக்கருக்கு தோராயமாக ரூ.48,000 மானியமாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா். ஈரோடு, நாமக்கல், திருப்பூா், கரூா், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com