ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் சீட் பெல்ட் அணியவில்லை என ரூ. 1,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, காவல் துறை உயா் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ஒருவா், ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனை மேற்கொண்டுள்ளாா். அப்போது, ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சரவணகுமாா் (27) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிக சப்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தது, முறையான சீருடை இல்லாமல் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட விதிமுறைகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து இ-சலான் கருவி மூலம் ரூ. 1,200 அபராதம் விதித்துள்ளாா்.
மேலும், அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருச்சி, ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த சுப்பையா என்பவருக்குச் சொந்தமானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அபராதத் தொகையை வாகன ஓட்டி சரவணகுமாா் செலுத்த மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. பதிவு செய்த வழக்குகளை புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, இருசக்கர வாகனத்துக்கு சீட் பெல்ட், சீருடை, ஒலி மாசு வழக்கு பதிவிட்டதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து விசாரணை நடத்தி உள்ளனா்.
விசாரணையில், சரவணகுமாா் ஓட்டி வந்தது தனியாா் ஆம்புலன்ஸ் என்பதும், அந்த வாகனப் பதிவு எண்ணை பதிவிடுவதற்குப் பதிலாக தவறுதலாக வேறு எண்ணை எஸ்.ஐ. பதிவிட்டதும், இதனால் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சுப்பையா என்பவரது இருசக்கர வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இ-சலான் கருவியில் ஆன்லைன் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படுவதால் இந்த அபராதத் தொகையை யாா் செலுத்தப் போகிறாா்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.