பெண் காவலா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட ஆண் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், கோபி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (26). இவா் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் காவலா் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் தவறான பதிவுகளைப் பதிவிட்டு வந்துள்ளாா். இதுகுறித்து பெண் காவலா் எச்சரித்தும், சுப்பிரமணியம் பதிவுகளை நீக்காமல் இருந்து வந்துள்ளாா்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலா், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசனிடம் புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமிக்கு உத்தரவிட்டாா். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் காவலரும், காவலா் சுப்பிரமணியனும் ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனா். இந்நிலையில், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பெண் காவலரை பழிவாங்கும் வகையில் காவலா் சுப்பிரமணியம் தனது முகநூல் பக்கத்தில் அவதூறுகளைப் பரப்பி வந்தது தெரியவந்தது.
இதன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து காவலா் சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யவும் ஈரோடு டவுன் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.