ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 9 மனமகிழ் மன்றங்களுக்கு சீல் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து சூதாடுவது போன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் சென்றது.
அதைத் தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் காவல் துறையினர் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டம் போன்ற முறைகேடு நடக்கிறதா? என்றும் அவர்கள் சோதனை நடத்தினர்.
அதன்பிறகு ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சில மனமகிழ் மன்றங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் வகையில் சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரில் காவல் துறையினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
இதில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஹோட்டல் கிளப் மேலாஞ்ச் (அறை எண் 302, 303), ஈரோடு சிட்டி ரெக்கரியேசன் கிளப், சோலார் கொங்கு ரெக்கரியேசன் கிளப், மொடக்குறிச்சி தமிழன் ரெக்கரியேசன் கிளப், நெரிஞ்சிப்பேட்டை சாய் ரெக்கரியேசன் கிளப், பவானி லட்சுமிநகர் பவானி கூடல் ரெக்கரியேசன் கிளப், சித்தோடு கே.ஆர்.சி.ரெக்கரியேசன் கிளப், பெருந்துறை மகாலட்சுமி ரெக்கரியேசன் கிளப், சிவகிரி கொங்கு தீரன் ரெக்கரியேசன் கிளப் ஆகிய 9 மனமகிழ் மன்றங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.