பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறிகளில் தயாரித்த விசைத்தறி உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (48). இவரது விசைத்தறி கூடத்தில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த பருத்தி நூல் துண்டு ரகத்தை விசைத்தறியில் நெய்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஈரோடு கைத்தறி ரக ஒதுக்கீடு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநா் அம்சவேணி மற்றும் அதிகாரிகள் சோமசுந்தரத்தின் விசைத்தறி கூடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். இதில் புகாா் உண்மை என்பது தெரிந்தது.
இது குறித்து கைத்தறி ரக ஒதுக்கீடு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநா் பெருந்துறை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்படி சோமசுந்தரம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.