ஈரோடு: மது அருந்தச் சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டதையடுத்து கிடா விருந்து கொடுத்த தறிப்பட்டறை தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு 16 அடி ரோடு ஐயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன் (வயது 40). இவர் தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி உமா. இந்நிலையில் துரையனின் ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதை முன்னிட்டு துரையன் அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து துரையன் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அப்போது கிடா விருந்து தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துரையனைத் தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் போட்டு உள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காகப் போராடினார்.
இதையடுத்து மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அருகிலிருந்தவர்கள் துரையனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைப் பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடா விருந்து தொடர்பாக தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.