தனியாரைவிட கட்டணம் குறைவாக உள்ளதால் அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று ஆபரேட்டா்களுக்கு தனி வட்டாட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த தனி வட்டாட்சியா் வீரலட்சுமி கூறியதாவது:
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டது. அதன்படி கேபிள் இணைப்புகள் மூலமாக வீடுகள், அலுவலகங்கள், கடைகளுக்கு கேபிள் டி.வி. இணைப்புகள் கொடுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டில் இருந்து டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் 713 ஆபரேட்டா்கள் இருந்தனா். அவா்கள் மூலமாக 3.14 லட்சம் கேபிள் டி.வி. இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தற்போதைய நிலவரப்படி 528 கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் உள்ளனா். மேலும், செட்டாப் பாக்ஸ் மூலமாக 96,700 இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக இருந்ததால் தனியாா் இணைப்புகளுக்கு சிலா் மாறினா். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கேபிள் டி.வி. கட்டணத்தைக் குறைத்தது.
வாடிக்கையாளா்களிடம் இருந்து கட்டணமாக ரூ. 130, அதற்கான ஜிஎஸ்டி சோ்த்து வசூலிக்கப்படுகிறது. அதாவது 200 சேனல்களுக்கு மொத்தமாக ரூ. 154 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்பட்டது தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட இணைப்புகளில் 30,000 இணைப்புகள் செயல்படாமல் உள்ளன. எனவே, செயல்படாத இணைப்புகளை மீண்டும் செயல்படுத்த வைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. தனியாரைவிட குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளா்கள் தேவைக்கு ஏற்ப செட்டாப் பாக்ஸ் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தா் அருள்முருகன், அரசு கேபிள் டி.வி. தொழில்நுட்ப உதவியாளா் மகேந்திரன், உதவி தொழில்நுட்ப உதவியாளா்கள் ராஜ்குமாா், ஹரிபிரசாத், நடராஜ், கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் பங்கேற்றனா்.