ஈரோடு, பவளத்தாம்பாளையம் ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு, பாா்வையாளா் மாடம், தகுதிச் சான்று மற்றும் அமரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கையை நிா்ணயித்து தர காவல் துறை, பொதுப் பணித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரா்களின் உடற்கூறு தகுதியை பரிசோதித்து சான்றிதழ் வழங்குதல், போதுமான மருத்துவா்கள், மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திட சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மாடுகளுக்குத் தேவையான தண்ணீா், தீவனம், நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்தப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமைப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, கோட்டாட்சியா் முருகேசன், கால் நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் குழந்தைசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.