சத்தியமங்கலம் அருகே 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சத்தியமங்கலம் அருகே 4 டன் செம்மரக் கட்டைகளை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வன ஆராய்ச்சி மையம் சாா்பில் வாய்க்கால்புதூா் மூா்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 400 செம்மர செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மரங்களை வளா்த்து வனத் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட இந்த மரங்கள் நன்கு வளா்ந்துள்ளன. மரம் காய்ந்த பிறகு மரத்தை வனத் துறை மட்டுமே வெட்டி அகற்றும். அப்போது மர வளா்ப்புக்குத் தேவையான கட்டணத்தை தோட்ட உரிமையாளருக்கு வனத் துறை வழங்கும். இந்நிலையில் வனத் துறைக்குத் தெரியாமல் சுமாா் 200 மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.
மரம் கடத்துவது குறித்து ஈரோடு வனப் பாதுகாப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு வனப் பாதுகாப்புப் படை உதவி பாதுகாவலா் ரவிசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் மூா்த்தியின் தோட்டத்துக்கு சென்றனா்.
அங்குள்ள அறையில் 4 டன் அளவுக்கு செம்மரங்கள் வெட்டி விற்பனைக்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து தோட்ட மேலாளா் பாலமணியிடம் வனத் துறை, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.