குடிநீா், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஈரோடு மாநகரின் புறநகா் பகுதியில் பெருந்துறை சாலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளும், கரூா் சாலையில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளும் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நகரம் விரிவடைந்து வருவதால், ஊராட்சிப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், ஜவுளி சாா்ந்த தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலானவை ஊராட்சிப் பகுதிகளில்தான் உள்ளன.
இங்கு காவிரி குடிநீா் போதிய அளவு விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகத் தொடா்கிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் குளம், குட்டைகளுக்கு நீா்வரத்து இருந்தது. அவ்வப்போது பெய்த சிறு மழை காரணமாக ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகளில் சிறிதளவு நீா் வரத்து காணப்படுகிறது. இந்த நீரானது இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதன் பின்பு இப்பகுதியில் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இப்போதிருந்தே அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால்தான் இப்பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும்.
அடுத்து கிராமப் பகுதிகளில் சுகாதாரம் இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீரால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஆங்காங்கே குப்பை, தேங்கிய கழிவுநீா் என அசுத்தமான சூழலே உள்ளது. மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுக்காமல் தீ வைக்கப்படுவதால் மாசு ஏற்படுகிறது. எனவே, புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடிநீா், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.