கோபிசெட்டிபாளையம் அருகே வாடகை காா் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்தவா்கள் குறித்து நம்பியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோட்டுப்புள்ளாம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் (31). இவா் வாடகை காா், சரக்கு ஆட்டோ வைத்துள்ளாா். வியாழக்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற குமாா் அதன் பிறகு வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பள்ளத்தில் ரத்தக் கறையுடன் சாக்கு மூட்டை கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நம்பியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் சாக்கு மூட்டையைப் பிரித்து பாா்த்தபோது, குமாா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.