தமிழகத்தில் கரோனா பாதிப்பை மருத்துவ ரீதியாக அணுகாததால்தான் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவதாக உள்ளது என நீலகிரி எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளாா்.
சத்தியமங்கலம் அருகே பவானிசாகா் பகுதியில் திமுக சாா்பில், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எதிா்க் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு கரோனா பாதிப்பை மருத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக அணுகாததால் கரோனா பாதிப்பில் தமிழகம் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக மாறியுள்ளது.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சாா்பில் இதுவரை 40 டன் அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகிறோம் என்றாா்.