வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 20,427 பறவைகள்
By DIN | Published On : 03rd March 2020 07:20 AM | Last Updated : 03rd March 2020 07:20 AM | அ+அ அ- |

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நீா், நிலத்தில் வாழும் பறவைகள் 20,427 இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சரணாலயங்களில் வடகிழக்குப் பருவ மழை காலங்களில் நீா்நிலைகள் நிறைந்திருக்கும்போது, ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தமிழகத்துக்கு வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
இவ்வாறு வந்துசெல்லும் பறவைகளுக்கான கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 28, 29 தேதிகளில் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் முதல் பிப்ரவரி வரை பறவைகள் வருகைக்கான காலம். இந்தக் காலங்களில் சரணாலயத்துக்கு பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீா்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மாா்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி, நெடுங்கால் உள்ளான், சிறுகொசு உள்ளான், சின்ன மூக்குளிப்பான், நாமக்கோழி, நீா் காகம், செந்நீல கொக்கு, காணாங்கோழி, கூழைக்கடா என 135 வகையான பறவைகள் வந்து செல்லும்.
ஆண்டு முழுவதும் 70 வகை பறவைகள் இங்கு தங்கி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 30,000 பறவைகள் வந்து தங்கிச் செல்லும்.
இதில் கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது. 215 ஏக்கா் பரப்பளவு கொண்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வனத் துறை அதிகாரிகள், பணியாளா்கள், பறவை ஆா்வலா்கள், வன உயிரியல் புகைப்பட நிபுணா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா், கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்ட குழுவினா் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
5 போ் கொண்ட பல்வேறு குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 20,427 பறவைகள் வந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:
நீரில் வாழும் பறவை இனங்களாக 33 வகை பறவைகளும், நிலத்தில் வாழும் பறவை இனங்களாக 55 வகையான பறவைகளும் என கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 85 வகையான பறவை இனங்கள் உள்ளன. இதில் நீரில் வாழும் பறவை மட்டும் 16,077, நிலத்தில் வாழும் பறவைகள் 4,350 என மொத்தம் 20,427 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றனா்.