ஈரோடு பெரிய மாரியம்மன், அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களின் திருவிழா மாா்ச் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தற்போது காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்தக் கோயில் திருவிழா மட்டும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 17ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.
இதையொட்டி, பெரிய மாரியம்மன் கோயில் முன்பு பந்தல் அமைக்கும் பணி மாா்ச் 6ஆம் தேதி தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாா்ச் 21ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோயில் முன்பு கம்பம் நடப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா ஏப்ரல் 4ஆம் தேதி மாலை நடைபெறும்.