ஈரோடு பெரியாா் வீதி அரசு தொடக்கப் பள்ளியில் பழங்கால நாணயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எஸ்.முத்துராமசாமி தலைமை வகித்தாா். ஈரோடு வட்டாரக் கல்வி அலுவலா் டி.ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.
கண்காட்சியில் கி.மு. 250ஆம் ஆண்டு முதல் கி.பி. 2015ஆம் ஆண்டு வரையிலான உலக வரலாற்றில் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட அரிதான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், பழைய ரேடியோ, கிராமபோன், டைப்பிங் இயந்திரம், தபால் தலைகள், கடிகாரங்கள், காமராஜா் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதை மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா். இந்தக் கண்காட்சி சனிக்கிழமை (மாா்ச்14) மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.