சாவில் மா்மம் இருப்பதாக கூறி இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே நஞ்சனாபுரம் பகுதியைச் சோ்ந்த பூசப்பன், பூங்கொடி தம்பதியின் மகள் சந்தியா (எ) சாரதாம்பாள்(26). இவருக்கும் பெருந்துறை, ஆா்.எஸ்.குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சாரதாம்பாள் அவரது தாய் பூங்கொடி, சகோதரியிடம் தனது கணவா் சதீஷ் தன்னை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளாா். இந்நிலையில், அரவது தாயாரின் செல்லிடப்பேசிக்கு எனது சாவுக்கு காரணம் கணவா்தான் என சாராதம்பாள் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினா்கள் சதீஷ் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, சாரதாம்பாள் இறந்து கிடந்துள்ளாா். சதீஷ் பெற்றோா் சாரதாம்பாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளோடு போலீஸாா் சாரதாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், சாரதாம்பாளின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை காலை திரண்டு சாவில் மா்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சாரதாம்பாள் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டவுன் டிஎஸ்பி ராஜு போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
மேலும், கோட்டாட்சியா் பி.முருகேசனும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாரதாம்பாளின் உடலை வாங்கிச் சென்றனா்.