சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், ஆசனூா் என 2 வனக் கோட்டங்களில் சத்தியமங்கலம், பவானிசாகா், டி.என்.பாளையம், கடம்பூா், விளாமுண்டி, தலமலை, ஆசனூா், கோ்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வனப் பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்து கருகிவிட்டன.
மேலும், வனப் பகுதியில் உள்ள பள்ளங்கள், ஓடைகள், வனக் குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீா் வற்றியதால் தற்போது வன விலங்குகளுக்குத் தீவனம், குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம், தண்ணீா் தேடி வனத்தைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், வன விலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக வனத் துறை சாா்பில் வனப் பகுதியில் ஆங்காங்கே தற்காலிக தண்ணீா்த் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீா் நிரப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தண்ணீா் தேடி வனப் பகுதியில் வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.